June 9, 2016

ஈக்களை பற்றிய அறிவியல் பதிவு.

உங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது! ( திருக்குர்ஆன் 22:73)
ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் : “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார். இவ்வளவு அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான் என்றால் ஈயைவிடவும் பன்பமடங்கு பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எத்துனை எத்துனை அற்புதங்களை அல்லாஹ் வைத்திருக்க வேண்டும்.
ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில் அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான நுண் கிருமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள் எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான். ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம் கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள். நபிகள் நாயகம் கூறினார்கள்:- “உங்கள் குடிபானத்தில் ஈ வீழ்ந்தால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்து விடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றையதில் நிவாரணமும் உள்ளது” (புஹாரீ, அபூதாவூத்)
ஈக்களின் ஒளி ஊடுபுகும் விதத்தில் அமைந்திருக்கும் இறகுகள் மிக விரைவாகப் பறப்பதற்கு ஏற்றவிதத்தில் உறுதியாகப் படைக்கப்பட்டுள்ளன.
ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. பொலித்தீன் போன்று மிக மெலிதாக அவ்இறக்கைகள் இருந்தாலும் பறக்கும்போது அவை பிய்ந்துவிடாத வண்ணம் அல்லாஹ் பாதுகாத்துவைத்துள்ளான்.

அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும் சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன.  அத்தோடு நம் கண்களுக்குத் தென்படாத அமைப்பில் மிக மெல்லிய இரத்த நரம்புகள்  அவற்றில் ஓடிக்கொண்டிருக்கின்றன. 

"மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துச்சென்றாலும் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பப் பறித்துக்கொள்ளவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமானவர்களே!” ( திருக்குர்ஆன் 22:73)"

தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.

திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள  (Proboscis) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி உருஞ்சிக்கொள்ளும். திட உணவாக இருப்பின் தனது உமிழ்நீரை அப்பொருளில் உமிழ்ந்து அதைக்கரைத்து நீர்ம நிலையில் உறுஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது. இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததன் பின்னரே அறிய முடிந்தது.

ஈ எவ்வாறு திட உணவுப் பொருள் திரவமாக மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ ஒரு உணவுப்பொருளில் அமர்ந்து ஒரு வித (நொதியை) எச்சிலை உமிழ்ந்து திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி, நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் நாம் அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது. இதைத்தான் அல்லாஹ் ஆயிரத்து நானூறு  வருடங்களுக்கு முன்பு “ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது;” என்று கூறுகிறான்.



சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...படியுங்கள்... பகிருங்கள்...

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்