May 25, 2011

வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!

ஜெயா தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஒரு சக்தி.  புதிய சட்டசபைக் கட்டிட அலுவலகம் வேண்டாம் என்று சொல்லும் யாராவது பழைய தலைமை செயலகத்தின் உள்ளே அலுவலகத்திற்கு சென்று பார்த்து இருக்கிறீர்களா? போயிருந்தால் மீண்டும் உள்ளே செல்ல மாட்டீர்கள் அந்த அளவுக்கு மோசமான ஒரு கட்டிடம்...முழுக்க நாற்றம் அடிக்கும் ..அங்கு பணி புரிந்தவர்களை கேளுங்கள், அவர்கள் சொல்லுவார்கள். முதலில் அங்கு இட பற்றாக்குறை,  சரியான பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாததால் பல ப்ரோக்கர்களும் கட்சி ஆட்களும் பல வழிகளில் உள்ளே நுழைந்து வெளியே வரலாம..ஏன் தீவிரவாதிகள் கூட எளிதில் தாக்கக்கூடிய அளவில் தான் உள்ளது .

ஜெயா ஒரு முறை கூட புதிய கட்டிடத்திற்குள் செல்லவில்லாமல்.சப்பை கட்டு காரணம் பல சொல்கிறார். இந்த புதிய கட்டிடம் கட்டியது மு க என்பதால் மனம் ஏற்க மறுக்கிறது .இது தான் ஆணவ வெறி மற்றும் அறிவீனம். ஜெயா தனக்கு தானே புதுபுது பிரச்சனைகளை உருவாக்கி கொள்பவர் என்பது பிரசித்தம். அரசு ஊழியர்கள் வசதியாக பணி புரிவார்களா அல்லது இவர் ஒருவருக்கு அந்த கட்டிடத்தை பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியும் அப்படியும் அலைந்து கொண்டு இருப்பார்களா? வரிகளை ஒழுங்காக கட்டும் இந்தியா பிரஜை என்றால் கட்சி சார்பற்று சிந்தியுங்கள்!. அந்த வரியினை வீணாக்குபவர்கள் கருணாநிதியாக இருந்தாலும் ஜெயாவாக இருந்தாலும் மன்னிக்க முடியாது. 



முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று கட்டிய காரணித்தினாலேயே இன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட கோபம்,விரோதம் காரணமாக அவரது இடது கையால் புறக்கணிக்கப்படும் இந்த சட்டசபைக் கட்டிடம்,  எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின், பொறியாளர்களின்,கட்டிடக்கலைஞர்களின், உழைப்பை,வியர்வையை, தொழில்நுட்ப அறிவை, திட்டமிடுதலை, கட்டிட வடிவமைப்பாற்றலை, உலகத்தரமான கட்டிட விதிகளை , சிறப்பம்சங்களை,  தன்னுள் வாங்கி இறுதியாக இவ்வடிவத்தை பெற்றிருக்கிறது என்று தெரியுமா?


1200 கோடிகள் செலவழித்து இந்த நவீன சட்ட சபையை கட்டிவிட்டு அதைப் பயன்படுத்த வில்லை என்றால் யாருக்கு நட்டம்?மக்களுடைய வரி பணம் தானே விழலுக்கு இறைத்த நீராகும்?. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு  பரம விரோதி தான், ஆனால் அந்த கட்டிடம் கருணாநிதியின் பணத்தில் கட்டவில்லையே, ஜெயலலிதா பெருந்தன்மையுடன் தன் பிடிவாதத்தை துறந்து சட்டசபையின் கூட்ட தொடரை   புதிய சட்டமன்றத்தில் கூட்ட வேண்டும் என்பதே, உழைக்கும் வர்க்கத்தின் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.


இது நடக்குமா? கனவிலும் நடக்கவே நடக்காது, இதே முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் கருணாநிதியை வைத்துப் பார்ப்போம், அவர் ஒரு வேளை இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயித்து வந்திருந்தால் எதிரி ஜெயலலிதாவே இதைக் கட்டியிருந்தாலும், அரசுப் பணம் தானே,  என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு நிச்சயம் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் ஜம்மென்று  இதே சட்டசபையில் தன் நாற்காலியில் போய் அமர்ந்திருப்பார்.   பின்னர் அவர், அவரின் விருப்பத்திற்கேற்ப வண்ணங்களையும் உள் அலங்காரங்களையும் வேண்டுமானால் மாற்றியிருப்பார். இது போல ஒரே அடியாக சட்டசபையையே புறக்கணித்து பழைய சட்டசபையை 100 கோடி ரூபாய் கொண்டு புதுப்பிக்கும் செயலை அவர் செய்திருக்கவே மாட்டார். கட்சிக்கொரு சட்டசபை என்ற விஷயத்தை கேள்விப்படும் வேற்று மாநிலத்தவர் யாருமே வாயால் சிரிக்க மாட்டார்கள்.


இந்த கட்டிடத்தின் அருமை பெருமைகளை சிறப்பம்சங்களை முழுக்க உணராது அது தண்ணீர் தொட்டி போல இருக்கிறது , பெட்ரோல் ரிஃபைனரியைப் போல இருக்கிறது, பாண்டிச்சேரி மாநில போலீசாரின் தொப்பியைப் போல இருக்கிறது என்று ஏளனம் செய்வது நகைப்புக்கிடமே. நல்லவை எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வது தான் நல்ல பண்பு.


ஒருவரை,ஒருவரின் படைப்பை பற்றி குறை சொல்லும் முன்னர் அவரின் படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு பேசத்துவங்குவதே சாலச்சிறந்தது.சென்னை சட்டசபை வளாகத்தை திறம்பட வடிவமைத்தவர்

இந்த படத்தில் இருக்கும் பெர்லினைச் சேர்ந்த தலைமை கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff என்பவராவார். அவரது gmp- von Gerkan, Marg und Partner Architects  இணையதளத்தின் சுட்டி:  http://www.gmp-architekten.de/en/news.html


இந்த நிறுவனத்தினர் உலகெங்கிலும் இது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டசபை வளாகங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது , இதன் கண்டெம்பொரரியான,கார்பொரேட் லுக் பொருந்திய தோற்றத்தையும் ஏனைய ஒப்பில்லாத சிறப்பம்சங்களையும் எண்ணிப் பார்க்கையில் இக்கட்டிட வல்லுனர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புரிகிறது.


புதிய சட்டசபை கொண்டிருக்கும் சிறப்பம்சங்கள்:-


சென்ற ஆண்டு திறக்கப்பட்ட, தமிழக புதிய சட்டசபை கட்டடம், உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் [க்ரீன் பில்டிங்] என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகங்களின், "தங்க தர நிர்ணயச் சான்றிதழும்' [கோல்ட்] இந்த கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது பசுமை விதிமுறைகளை   தீவிரமாக கடைபிடித்து 100 க்ரெடிட்டுகளுக்கும் மேலாக வருமாறு பார்த்துப்பார்த்து வடிவமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.


30 க்ரெடிட்டுகள் [பாயிண்டுகள்] வருவதற்கே லீட் கன்சல்டண்ட்களும் ஏனைய பொறியாளர்களும் மண்டையை உடைத்துக் கொள்வர், 100 பாயிண்டுகள் வாங்குவது அத்தனை சுலபமல்ல, இது க்ரீன் பில்டிங்காக அதுவும் 100 க்ரெடிட்டுகளுடன் திகழ்வதால் தான் இதை கட்ட இத்தனை செலவு பிடித்திருக்கிறது, ஆனால் அத்தனையும் இயற்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடையே, 100 இயற்கைக்கு கேடு விளைவிக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது, கார்பனை வெளியேற்றத்தை எவ்வளவு முடியுமோ  அவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டிடம் இது. அங்கே கட்டிட நிலப்பரப்பில் இருந்து கட்டிட வேலைகளின் பொழுது அகற்றப்பட்ட மரங்கள், அதே சட்டசபை நிலப்பரப்பில் கட்டிடம் எழும்பிய பின்னர் மாற்று இடத்திலோ அல்லது தோட்டத்திலேயோ திரும்ப நடப்பட்டுள்ளன.


சட்டசபை கட்டடத்தில் 3.4 லட்சம் சதுர அடியில் பசும்புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் கூரைகள் எல்லாவற்றிலும்  லேண்ட்ஸ்கேப்ட் கார்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. "ரீ-சைக்கிளிங்' முறைப்படி தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் செடிக்கு பாசனக்காரர்கள் தேவையில்லை, குறித்த நேரத்திற்கு பாசனக்கருவிகள் இயங்கி செடிகளுக்கு நீரைப் பாய்ச்சும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கட்டிட உபயோகத்துக்கு கிடைக்கும்.


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அருமையாக இக்கட்டிடத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படும் வகையில், ஆட்டோ சென்சார் முறைகொண்டு இயங்கும் யூரினல்கள்,வாஷ்பேசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தண்ணீர் தேவை 52 சதவீதம் குறையும்.கட்டிடத்தின் வெளிப்புற வார்ப்பு பலகைகளில் நவீன கோலங்கள் கொண்ட டிசைன் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


கோலங்களில் உள்ள சிறிய புள்ளிகள் மூலம் வெளிச்சம் உட்புகும்; வெப்பம் உள்ளே வராதவாறு அமைந்ததும் இதன் சிறப்பு. 60 சதவீத வெப்பத்தை உட்புக விடாமல் வெளியேற்றும் வகையில்,கட்டிடத்தின் ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. கட்டிட வளாகத்தில் இயற்கையாகவே வெளிச்சம் நிறைந்திருக்கும்.பகலில் மின்சார விளக்குகளுக்கு தேவையே இருக்காது என்பதும் இன்னொரு சிறப்பு.


எந்த அறையிலுமே ஆட்கள் இல்லை என்றால் ஐந்து நிமிடத்திற்குள், விளக்குகள், மின்விசிறிகள் தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். மின் சிக்கனத்தை மனதில் கொண்டு, இந்த நடைமுறை எல்லா பகுதிகளிலுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் தேவை குறையும். சென்னையின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூரில் உள்ள செடிகளே லேண்ட்ஸ்கேப்டு கார்டன்களில் வைக்கப்படுகின்றன.


இச்செடிகள் இரண்டு ஆண்டுகள் வளர்ந்தபின்னர் தண்ணீர் தேவைப்படாது. கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றி 800 கி.மீ., தூரத்திற்குள் வாங்கப்பட்டவை என்பதும் சிறப்பு. சுகாதாரம் பேணுதல், மின், குடிநீர் சிக்கன முறை கையாளுதல் என ஒவ்வொன்றுமே பசுமை விதிகளின் படியே கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே பசுமை விதிகளின் கீழ் கட்டப்பட்ட ஆட்சி மன்ற கட்டடம் என்ற பெருமை, இந்த வகை சிறப்பம்சங்களால் தான் தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகத்தின் நீண்ட ஆய்வுக்கு பின்னர், "தங்க தர நிர்ணயச் சான்றிதழ்' கிடைத்துள்ளது.


இது தமிழகத்தின் பிரமாண்டமான கட்டுமானப் பணி ஆகும். கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி 5.9.08 அன்று திறக்கப்பட்டது. 12.11.08 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 18 மாதங்களுக்குள், அதாவது 11.5.10-க்குள் புதிய சட்டசபையை கட்டி முடிப்பதற்காக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.2010-11-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டினை புதிய சட்டசபையில் தாக்கல் செய்துவிடவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக சட்டமன்ற மண்டபத்தை மட்டுமாவது முழுவதுமாக கட்டிமுடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.அதன்படியே மார்ச் 10-ம் தேதி முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. தலைமைச் செயலகம் கட்டிடத்தின் இறுதிகட்ட பணிகளும் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.


இப்போது புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. முதல் பகுதி ஏ பிளாக் என்று அழைக்கப்படுகிறது.  ஏ பிளாக், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 4 பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  இது 9 லட்சம் சதுர அடிபரப்பில், ரூ.425.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்து மத கோட்பாடின் படி, கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவும் வட்ட வடிவிலான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. பொது விதிகளின் படி,  உலகின் எந்த ஒரு மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம் போன்றவை வட்ட வடிவத்தில்தான் கட்டப்படுகின்றன. அது போலவும், இந்துமத தர்மப்படி சக்கரம் என்பதை அடிப்படையாக வைத்தும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள 4 கட்டிடங்களும் சக்கரம் போல் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.


கூவம் ஆற்றை ஒட்டிய சுவாமி சிவானந்தா சாலையின் (சென்னை தொலைக்காட்சி நிலைய சாலை) அருகில் முதல்-அமைச்சர் வட்டத்தில் (சி.எம். சர்க்கிள்) தொடங்கி, நூலக வட்டம் (லைப்ரரி சர்க்கிள்),சட்டப்பேரவை வட்டம் (அசம்ப்ளி சர்க்கிள்) என தொடர்ந்து, வாலாஜா சாலை அருகே பொது வளாகம் (பப்ளிக் பிளாசா) என நீள்வட்ட வடிவத்தில் இந்த ஏ பிளாக் பகுதி போய் முடிவது இதன் சிறப்பு. இரண்டாவது பகுதியான பி பிளாக்கில், தலைமைச் செயலக அலுவலகங்கள் அமைந்திருக்கின்ற். 7 மாடிகளை கொண்ட ஏழு தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பி பிளாக் கட்டுமானப் பணிகள் இந்த 2011 மே மாதத்தில் முடிக்கப்படவுள்ளது.


ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களும் 6 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை அமையவுள்ள சட்டப்பேரவை வட்டத்தில் 100 அடி உயரம் கொண்ட 6 மாடி கட்டிடத்தின் மீது, அதே அளவு உயரம் (100 அடி) கொண்ட பிரமாண்ட மேற்கூரை (டோம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டோமின் மீது கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற அரங்கினுள் நேரடியாக சூரிய வெளிச்சம் கிடைக்கும். இந்த கூரையை சட்டமன்ற அரங்கில் தரைத்தளத்தில் அமர்ந்தபடியே பார்த்து ரசிக்கமுடியும். இது ஒரு ஆட்ரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மேற்கூரையை, துருப்பிடிக்காத வகையில் தயாரித்துள்ளதும் மற்றொரு சிறப்பு, ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகளும்,  இந்த மாத இறுதியில் முடிக்கப்பட்டுவிடும்.


சட்டப் பேரவை கட்டிடத்தின் தரைத்தளத்தில் சட்டசபை (285 எம்.எல்.ஏ. இருக்கைகள்), சபாநாயகர் அறை, சட்டமன்றக் கட்சி அலுவலக அறைகள் (5 அறைகள்), முதல்வரின் செயலக அறை, கொறடா அறை, சார்புச் செயலாளர் அறை, எதிர்கட்சித் தலைவர் அறை, துணை சபாநாயகர் அறை, ஒப்பனை அறை ஆகியவைஅமைந்துள்ளன.முதல் தளத்தில் கூட்ட அரங்கு, பொதுப்பணித் துறை பராமரிப்பு அலுவலகம், பிரிவு அலுவலகம், பத்திரிகையாளர் கேலரி, சார்புச் செயலாளர் பிரிவு, உணவுக் கூடம்,ஒப்பனை அறை;2-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம்,பார்வையாளர் கேலரி, ஒப்பனை அறை.3-வது தளத்தில் சார்புச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, கூடுதல் துறைச் செயலாளர் அறை, பிரிவு அலுவலகம், பார்வையாளர் அறை, வெளிநாட்டவர் பதிவு செய்யும் அறை, உணவுக் கூடம், ஒப்பனை அறையும் அமைக்கப்பட்டிருக்கிறது..


4-வது தளத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பிரிவு அலுவலகம், சார்புச் செயலாளர் அலுவலகம், ஒப்பனை அறை.5-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, இணைச் செயலாளர் அறை, ஒப்பனை அறை. 6-வது தளத்தில் செயலாளர் அறை, இணைச் செயலாளர் அறை, முதல்-அமைச்சர் செயலக அலுவலகம், கண்காணிப்புப் பிரிவு,பொதுப்பணித் துறையின் மின்பராமரிப்புப் பிரிவு, பார்வையாளர்கள் அறை, ஒப்பனை அறை ஆகியவை அமைந்துள்ளன. இதுபோல், முதல்வர் வட்டம், நூலக வட்டம், பொது வளாகம் ஆகியவற்றிலும் பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும் வகையில் தனித்தனி 6 மாடி கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி, இந்த மாபெரும் வளாகத்துக்குள் வந்துசெல்லவேண்டும் என்று முதல்வர் விரும்பியதால், வாலாஜா சாலையை ஒட்டிய பகுதியில் பொது வளாக பகுதி (பப்ளிக் பிளாசா) அமைகிறது. இதில் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்லலாம்.


பொதுமக்கள் ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களும் நீர்நிலைகளும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தாண்டி சட்டசபைக்குள்ளே நுழைய முடியா வகையில் உறுதியான உடையாத கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் ஒவ்வொரு தளமும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் இணையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் உடன் கூடிய சோதனை வாசல்கள் உள்ளன.  சோதனைக்குப் பிறகே அடுத்த கட்டிடத்துக்குள்ளே செல்ல முடியும். அதிகாரிகளுக்கான நுழைவு வாயில், சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்திருக்கிறது.இக்கட்டிடம் மிகவும் இன்றைய முக்கிய தலைவலியான,பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழாவண்ணம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளன .

From: showketh hussain (பயனுள்ள தகவல்கள்)

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்